திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் 300 உலமாக்களுக்கு மிதி வண்டிகளும், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ 7 கோடி 15 லட்சம் மதிப்பிலான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோலார்பேட்டை) நல்லதம்பி (திருப்பத்தூர்), ஏ.சி. வில்வநாதன் (ஆம்பூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு உலமாக்களுக்கு மிதிவண்டிகள், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுப்பொருட்கள் உட்பட 713 பயனாளிகளுக்கு 7 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அடுப்பூதும் பெண்களுக்கு படி படி என்று கூறி தமிழகத்தில் பெண்கள் படித்துக்கொண்டு இருப்பதற்கு வழிவகை செய்தது திராவிட இயக்கம்.
1920ல் நீதி கட்சி தோன்றவில்லை என்றால் திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் பெண்கள் இன்று வரை படித்திருக்க முடியாது. அரசின் பல்வேறு துறைகளில் பெண் அதிகாரிகள் இருப்பதற்கும், அனைத்து அரசு தேர்வுகளில் மாணவிகள் ஆண்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் வருகிறார்கள், இதற்கெல்லாம் காரணம் சமூக நீதியை நோக்கி செல்லும் இந்த திராவிட இயக்கம். மேலும் பெண்கள் வளர்ச்சியடைய தேவையான அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய உந்து சக்தியாக இருப்பது திராவிட இயக்கம் தான். மேலும் பெண்களின் வளர்ச்சியடைய பல்வேறு திட்டங்களை தீட்டி வரும் அரசு தான் தற்போதைய அரசு என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், நகர கழக செயலாளர்கள் வி.எஸ்.சாரதி குமார்(வாணியம்பாடி), எஸ். ராஜேந்திரன்(திருப்பத்தூர்), ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய கழக செயலாளர் உமா கண்ணுறங்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் ஸ்ரீதர், உதயேந்திரம் பேரூர் கழக செயலாளர் அ.செல்வராஜ், நகர மன்றத் துணைத் தலைவர் கயாஸ் அஹமத், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சுனா கைசர் அஹமத், சையத் நிசார் அஹமத், பல்வேறு துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment