திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் விதமாக பொதுமக்களிடையே வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 100% வாக்களிப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை வழங்கினார் . அதனைத் தொடர்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பாடல்களை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஷக்சம் என்னும் கைபேசி செயலியை மாற்றுத்திறனாளிகள் தங்களின் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து செயலியை உபயோகிக்கும் முறை குறித்து மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் முடநீக்கு சிகிச்சை நிபுணர் இனியன், மாவட்ட ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் பிரியா, மாற்றுத்திறனாளி துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment