திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்றதும் நினைவுக்கு வருவது ரயில் நிலையமும் ஏலகிரி மலையும். 1809 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ராணுவ மையம் உருவாக்கப்பட்டது. அப்போது சென்னையில் உள்ள குடியேற்ற நிர்வாகத்துடன் புதிய சிவில் மற்றும் ராணுவ புற காவல் இடையே அதிக போக்குவரத்து தொடர்பு இருந்ததால் 1845 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது.
சென்னை ராயபுரம் - வாலாஜா ரோடு பாதை பணியை தொடங்கியது. 1856 ஆம் ஆண்டு ராயபுரம் - வாலாஜா ரோடு பணி முடிந்து தென்னகத்தின் முதல் பயணிகள் ரயில்வே தொடங்கியது. பின்னர் பெங்களூர் -ஜோலார்பேட்டை இடையில் 149 கிலோமீட்டர் அகல பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ள ஜாலர் என்ற ஆங்கிலேயர் ஜோலார்பேட்டையில் தங்கி ரயில்வே பணிகளை மேற்கொண்டார்.
அதன் பிறகு 1864 ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை முதல் பெங்களூர் கண்டோன்மென்ட் வரை பணிகள் முடிந்து பெங்களூர் மெயின் ரயில் சேவை தொடங்கியது. இந்த ரயில் நிலைய பணிகளை மேற்கொண்ட ஜாலர் என்ற ஆங்கிலேயரின் பெயரைக் கொண்டு ஜோலார்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய வானிலை தொலைநோக்கு நிலையம் காவலூரில் உள்ளது. இதனை தொடங்கி வைக்க அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் சென்னையில் இருந்து காவலூர் வர ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அடையாளமாக இருந்தது.
இத்தகைய சிறப்புமிக்க ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய ரயில் நிலையம் ஆகும். தினமும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாதத்திற்கு கோடிக்கணக்கில் ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் ஈட்டப்படுகிறது. பல்வேறு முக்கிய மாநிலங்களை இணைக்கும் ரயில் நிலையங்களில் ஒன்றாக இருந்து வருவதால், சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இத்தகைய ரயில் நிலையம் அடிப்படை வசதி மேம்படுத்தப்படாமல் இருந்து வந்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் அவ்வப்போது கோரிக்கை வைத்து வந்தார்.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக காணொளி காட்சி மூலம் பணியை துவக்கி வைத்தார். இதில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் மேம்படுத்துவதற்காக 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருப்பத்தூர் ரயில் நிலையம் 7 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ரயில் பயணிகள் பெரியோர் முதல் சிறியவர்கள் வரை எளிமையாக பிளாட்பாரங்களை கடக்க லிப்ட் வசதியும் எஸ்கலேட்டர் வசதி புதிய டிக்கெட் கவுண்டர்கள் ரயில்வே துறை சார்ந்த அலுவலகங்கள் கார் பார்க்கிங் டூவீலர் பார்க்கிங் பயணிகள் வெயிட்டிங் அறை தங்கும்அறை என அடிப்படை வசதியுடன் நவீன மயமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் இன்னும் சில மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்பட்ட புதிய ரயில் நிலையமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையம் காட்சியளிக்க உள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment